செய்திகள்

சீர்காழி அருகே கூலி தொழிலாளி அடித்து கொலை?- போலீசார் விசாரணை

Published On 2019-04-24 12:32 GMT   |   Update On 2019-04-24 12:32 GMT
சீர்காழி அருகே கூலித் தொழிலாளி மர்மமான முறையில் காயத்துடன் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புதுதுறை கிராமம் மேலத்தெருவை சேர்ந்தவர் சேகர் (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு வசந்தா என்ற மனைவியும், வசந்த் என்ற மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று சேகர், வெள்ளப்பள்ளம் உப்பனாறு கரையோரம் உள்ள கருவேல மரத்தடியில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், உடனே திருவெண்காடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து சேகர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

பிணமாக கிடந்த சேகரின் நெற்றியில் காயம் இருந்தது. இதனால் அவரை யாராவது அடித்து கொலை செய்திருக்கலாம்? என்று போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

பின்னர் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே சேகரின் மனைவி வசந்தா, திருவெண்காடு போலீசில் புகார் செய்தார். அதில் தனது கணவர் சாவில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணமாக வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News