செய்திகள்
திருவட்டார் பகுதியில் மழை காரணமாக சாய்ந்த வாழைகள்.

திருவட்டாரில் சூறைக்காற்றுடன் மழை - 2 ஆயிரம் வாழைகள் நாசம்

Published On 2019-04-23 10:07 GMT   |   Update On 2019-04-23 10:07 GMT
திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசியது.

இந்த நிலையில் கோடை காலமும் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. கடந்த 18-ந்தேதி ஓட்டுப்பதிவின்போதும் வெயில் அதிகமாக இருந்ததால் வாக்காளர்கள் காலையிலேயே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று ஓட்டுப் போட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குமரியின் மேற்கு மாவட்டத்தில் தொடங்கிய மழை மாவட்டம் முழுவதும் பெய்ததால் பொதுமக்கள் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பித்தனர்.

தற்போது கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக குமரி மாவட்டத் தில் அதிக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட் களாக நீடிக்கும் இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று குலசேகரம், திருவட்டார் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. தற்போது விடுமுறை காலம் என்பதால் அதிக அளவு சுற்றுலா பயணிகள் அங்கு சென்று நீராடி மகிழ்கிறார்கள்.

அதே போல பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்தது. அதேசமயம் நாகர்கோவில் நகரில் மழை பெய்யவில்லை. வானில் கருமேகங்கள் திரண்டு இடி இடித்தது. ஆனால் குளிர்ந்த காற்று மட்டுமே வீசி சற்று ஆறுதல் அளித்தது.

திருவட்டார் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக அவ்வை ஏலாக்கரை பகுதியில் வாழைகள் ஒடிந்து விழுந்து நாசமானது. இந்த பகுதியில் மட்டும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சரிந்தன. இந்த வாழைகளில் பெரும்பாலானவை குலை தள்ளிய நிலையில் இருந்ததால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. வாழைகள் சரிந்ததால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து உள்ளனர். தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

குமரி மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

பேச்சிப்பாறை-20, பெருஞ்சாணி-9.2, சிற்றாறு 1-15.2, சிற்றாறு 2-6, அடையா மடை-4, கோழிப் போர்விளை-10, புத்தன் அணை-10.4, திற்பரப்பு-10.8.

மழை காரணமாக குமரி மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 2.10 அடியாக இருந்தது. அணைக்கு 140 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 62 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சாணி அணையில் 20.65 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 29 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.




Tags:    

Similar News