செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பு- டைரக்டர் கவுதமன் கண்டனம்

Published On 2019-04-23 09:50 GMT   |   Update On 2019-04-23 09:50 GMT
இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்ப் பேரரசு கட்சி தலைவர் கவுதமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழ்ப் பேரரசு கட்சி தலைவர் கவுதமன், நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

இயேசு பெருமான் உயிர்த்தொழுந்த ஈஸ்டர் பண்டிகையான ஞாயிறு அன்று வழிபாட்டுத் தலங்கள் மீதும் அங்கு வழிபட்டுக் கொண்டிருந்த மனித உயிர்கள் மீதும் நடத்தப்பட்டது. மனித குலத்திற்கு எதிரான காட்டு மிராண்டித்தனமான தாக்குதல். இத்தகைய கொடூர தாக்குதலுக்கு அறம் சுமந்த தமிழர்களான நாங்கள் எங்களின் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் இனத்தை முன்பு ஆண்ட விடுதலைப்புலிகள் இப்போது இருந்திருந்தால் அவர்களின் மீது இந்த பழியைப் போட்டு கதையை முடித்திருப்பீர்கள். ஏற்கனவே கல்வி உரிமை, வேலை உரிமை, நில உரிமை, மான உரிமை, உயிர் உரிமை என அனைத்தையும் இழந்து நிற்கும் எங்கள் தமிழினத்தை இது போன்ற தாக்குதல்களை நடத்தி தொடர்ந்து அழிக்க நினைத்தால் 50 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்கள் தமிழ் தலைமுறைகளால் சகித்துக் கொள்ளவும் முடியாது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்த தாக்குதலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குங்கள். பாதிக்கப்பட்ட எங்கள் தமிழர்களுக்கு மட்டுமல்ல உங்களது சிங்களர்களுக்கும் உங்கள் மண்ணின் இயற்கையை காண வந்த வெளிநாட்டு பயணிகளுக்கும் நேர்மை கொண்டு உடனடியாக நீதியும் நிவாரணமும் வழங்குங்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News