செய்திகள்
அரியலூர் மோதல் சம்பவம்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல்
அரியலூர் மோதல் சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி - பா.ம.க. இடையே ஏற்பட்ட மோதலில் 20க்கும் மேற்பட்ட வீடுகள், மொபட் அடித்து நொறுக்கப்பட்டது. இதில் இருதரப்பினரை சேர்ந்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இந்த கலவர சம்பவத்தை கண்டித்தும், தலித் மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஜெயங்கொண்டம் அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் அரியலூர் எஸ்.பி. சீனிவாசன் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி உடையார் பாளையம் பஸ்நிலையம் அருகேயும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.