செய்திகள்

வேறு பெண்ணுடன் நாளை திருமணம் - காதலியுடன் வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2019-04-09 11:47 GMT   |   Update On 2019-04-09 11:47 GMT
வேறு பெண்ணுடன் நாளை திருமணம் நடைபெற இருந்த நிலையில் காதலியுடன் வாலிபர் வி‌ஷம் குடித்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). தொழிலாளி. இவரும் அதே பகுதியை சேர்ந்த ஆசைமணி மகள் ஈஸ்வரியும் (27) கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் காதல் விவகாரம் ஈஸ்வரியின் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் மகளை கண்டித்தனர்.

இதையடுத்து ஈஸ்வரியின் பெற்றோரிடம் அருண்குமார் சென்று உங்கள் மகளும் நானும் காதலிக்கிறோம். அவரை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்றார். அதை கேட்டு ஆத்திரம் அடைந்த அவர்கள் அருண்குமாரை திட்டி அனுப்பி விட்டனர். இந்த சம்பவத்தால் காதல் ஜோடிகள் அருண்குமாரும், ஈஸ்வரியும் மன வேதனையில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அருண் குமாருக்கு அவரது பெற்றோர் உறவினர் பெண் ஒருவரை திடீரென திருமணம் பேசி நிச்சயம் செய்தனர். இதற்கு அருண்குமார் கடும் எதிர்ப்பு தெரிவித்து தனது பெற்றோரிடம் சண்டை போட்டார். அப்படியும் அவர்கள் மனம் மாறவில்லை. அருண் குமாருக்கும் நிச்சயம் செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கும் நாளை (10-ந் தேதி) திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே காதலித்த ஈஸ்வரியை தான் திருமணம் செய்வேன் என்பதில் அருண்குமார் உறுதியாக இருந்தார். இதனால் அவர் தன் காதலி ஈஸ்வரியை அழைத்து கொண்டு கும்பகோணம் அருகே உள்ள ஒரு இடத்துக்கு சென்றார்.

திருமணத்தில் தான் நாம் ஒன்று சேர முடியவில்லை. சாவிலாவது ஒன்று சேருவோம் என இருவரும் முடிவு செய்தனர். பின்னர் 2 பேரும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காதல் ஜோடிகள் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த அவர்களது பெற்றோரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

இது குறித்து அரித்துவாரமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News