செய்திகள்
நாகூர் அருகே முதியவர் மர்ம மரணம்
நாகூர் அருகே முதியவர் மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
நாகூரை அடுத்த பனங்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 65). இவர் கடந்த 2-ந் தேதி வாஞ்சூரில் உள்ள சாராயக்கடைக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் அவர் மாயமாகி விட்டார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நாகூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது கீழவாஞ்சூர் பகுதியில் சந்திரசேகர் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் அளவுக்கு அதிகமாக குடித்து இறந்திருக்கலாம் என்று கூறுப்படுகிறது. அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளதால் இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.