மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம் - மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர் கைது
வேலாயுதம்பாளையம்:
கரூர் மாவட்டம், நொய்யல் அருகே வெல்லக்கல் மேட்டைச் சேர்ந்தவர் முனுசாமி (43). இவரது மனைவி பரமேஸ்வரி (30). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
முனுசாமிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் பரமேஸ்வரியிடம் மது அருந்துவதற்கு பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவதன்று முனுசாமி பரமேஸ்வரியிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனுசாமி அருகில் கிடந்த கத்தியை எடுத்து பரமேஸ்வரியின்கழுத்தை அறுத்தார். வலி தாங்க முடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் பரமேஸ்வரியை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வேலாயுதம்பாளைம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அருள்செல்வன் வழக்கு பதிவுசெய்து முனுசாமியை கைது செய்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்து வருகிறது.