செய்திகள்

உசிலம்பட்டி, மேலூரில் ரூ.6½ லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் அதிரடி

Published On 2019-03-27 11:30 GMT   |   Update On 2019-03-27 11:30 GMT
பறக்கும் படையினரின் அதிரடி சோதனையில் மேலூர், உசிலம்பட்டியில் ரூ.6½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
உசிலம்பட்டி:

உரிய ஆவணங்களின்றி பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அனைத்து தொகுதிக்கும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி அருகே தேனி மாவட்ட எல்லையில் கணவாய் மலைப்பகுதியில் டாஸ்மாக் தாசில்தார் தமிழ்செல்வி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கேரளாவில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் வந்த கேரள மாநிலம் கட்டப்பனை பகுதியைச் சேர்ந்த ஜேக்கப் (வயது 47) உரிய ஆவணமின்றி ரூ.1 லட்சத்து 58 ஆயிரத்து 190 வைத்திருந்தது தெரியவந்தது.

அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். ஜேக்கப் கூறுகையில், ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு பணம் எடுத்து வந்ததாக தெரிவித்தார்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த என்ஜினீயர் மூர்த்தி, உறவினர் மதனுடன் காவல் காரைக்குடி சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

மேலூர் அருகே உள்ள இ.மலம்பட்டி பகுதியில் வந்தபோது பறக்கும்படை அதிகாரி ரத்தினவேல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன் சோதனை செய்தனர்.

இதில் மூர்த்தியிடம் இருந்து ரூ.3 லட்சமும், மதனிடம் இருந்து ரூ.2 லட்சமும் ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்தப்பணம் தாசில்தார் சிவசாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News