செய்திகள்

புதுவையில் இருந்து தமிழகத்துக்கு கடத்த முயன்ற 500 மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2019-03-25 11:18 GMT   |   Update On 2019-03-25 11:18 GMT
புதுவையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி செல்ல முயன்ற 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 11 பேரை தேடி வருகின்றனர்.
புதுச்சேரி:

பாராளுமன்ற தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை கடத்தப்படுவதை தடுக்க பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பறக்கும் படையினர் புதுவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விடிய, விடிய வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

மேலும் புதுவையில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக தமிழகத்துக்கு பல்வேறு பகுதிகளுக்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இன்று அதிகாலை 5 மணி அளவில் உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் தனசெல்வம் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், வெங்கடாஜலபதி, கட்ட சுப்புராஜ் மற்றும் போலீசார் மறைமலையடிகள் சாலை, அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது சாலையின் ஓரத்தில் 5 துணிபைகள் இருந்தன. அதன் அருகே 11 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் போலீஸ் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு வைக்கப்பட்டிருந்த பைகளை திறந்து பார்த்தனர். உள்ளே மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 500 மதுபாட்டில்கள் இருந்தன.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் இந்த மதுபாட்டில்கள் புதுவையில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.

மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப்பாட்டில்களின் மதிப்பு ரூ.30 ஆயிரம் ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை கலால் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News