செய்திகள்

ஓடும் பஸ்சில் புதுமண தம்பதியிடம் 22 பவுன் நகை கொள்ளை

Published On 2019-03-24 11:50 GMT   |   Update On 2019-03-24 11:50 GMT
ஓடும் பஸ்சில் புதுமண தம்பதியிடம் 22 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

வியாசர்பாடியை சேர்ந்தவர் சரவணன் (28) வெள்ளிப்பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி தில்லி ராணி. இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

புதுமண தம்பதிகளான இவர்கள் ஆரணியில் உள்ள தில்லி ராணியின் தாய் வீட்டிற்கு செல்ல இன்று கோயம்பேடு வந்தனர். காலை 7.30 மணியளவில் கோயம்பேடு பஸ்நிலையத்தில் இருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்தனர்.

பஸ் புறப்பட்டு நெற்குன்றம் அருகே வந்தது. அப்போது தங்களது தலைக்கு மேல் வைத்திருந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அப்போது பெட்டிக்குள் வைத்திருந்த நகைப்பை காணவில்லை.

அதில் 22 பவுன் தங்க நகைகள் இருந்தன. அவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓடும் பஸ்சில் 2 பெண்களிடம் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Tags:    

Similar News