செய்திகள்

பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் - 11 பேர் கைது

Published On 2019-03-19 17:48 GMT   |   Update On 2019-03-19 17:48 GMT
பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணனுக்கு பண்ருட்டி பகுதி தென்பெண்ணை ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மேற்பார்வையில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், பாக்கியலட்சுமி, பால சுப்பிரமணியன் மற்றும் போலீசார் பண்ருட்டி பகுதியில் மணல் கடத்தல் தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புலவனூரில் இருந்து மாட்டுவண்டிகளில் மணல் அள்ளி வந்தவர்களை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மாட்டுவண்டிகளை ஓட்டி வந்த தட்டாம்பாளையத்தை சேர்ந்த சிவராமன்(வயது 35), தட்சிணாமூர்த்தி(52), சந்திரவேல்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் மேல்குமாரமங்கலம் தென்பெண்ணையாற்றங்கரை அருகே மாட்டுவண்டிகளில் மணல் கடத்தி வந்த மேல்குமாரமங்கலத்தை சேர்ந்த பொன்மன்னன்(40), அம்பிகாபதி(27), லோகநாதன்(27), காசிநாதன்(37), அழகுநாதன்(45), ராமமூர்த்தி(40), கிருஷ்ணமூர்த்தி(53), லட்சுமணன்(48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இவர்களிடம் இருந்து 11 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News