செய்திகள்

களக்காடு அருகே பெண் அடித்துக்கொலை - தந்தை, 2 மகன்கள் கைது

Published On 2019-03-19 12:43 GMT   |   Update On 2019-03-19 12:43 GMT
களக்காடு அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.
களக்காடு:

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கல்லடி சிதம்பரபுரம் நடுவூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி புஷ்பம் (வயது 70). இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் புண்ணிய மார்த்தாண்டம் (60). இவர் அந்த பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார்.

இவர்கள் 2 பேருக்கும் இடையே வீட்டின் முன்பு கழிவுநீர் செல்வதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை புண்ணிய மார்த்தாண்டம் வீட்டு கழிவுநீர், புஷ்பம் வீட்டு முன்பு சென்றதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த புஷ்பம் இதுகுறித்து புண்ணிய மார்த்தாண்டத்திடம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

இதில் ஆத்திரமடைந்த புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன் (40), ரமேஷ் ஆகியோர் புஷ்பத்தை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் புஷ்பம் தடுமாறி கீழே விழுந்தார். உடனே அவரை 2 பேரும் சேர்ந்து காலால் மிதித்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நேவி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள், புஷ்பத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து புண்ணிய மார்த்தாண்டம், அவருடைய மகன்கள் சரவணன், ரமேஷ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். கைதான 3 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், ‘‘கழிவுநீர் பிரச்சனையில் தொடர்ந்து எங்களிடம் தகராறு செய்து அவதூறாக பேசியதால் கொன்றோம்’’ என குறிப்பிட்டுள்ளனர்.

பின்பு கைது செய்யப்பட்ட 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புண்ணியமார்த்தாண்டம் மனைவி ரத்னபாய் தலைமறைவாக உள்ளார். அவரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News