செய்திகள்

தேர்தல் கமி‌ஷன் உத்தரவு - தலைவர்கள் சிலைகளை மறைத்த துணிகள் அகற்றம்

Published On 2019-03-18 07:44 GMT   |   Update On 2019-03-18 07:44 GMT
மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவிற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். #Parliamentelection
ஊத்துக்கோட்டை:

தமிழகத்தில் ஏப்ரல் 18-ந் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் கடந்த 10-ந் தேதி அறிவித்தது. அன்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

இதையொட்டி ஊத்துக்கோட்டையில் உள்ள மறைந்த பெரியார், காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் போர்வைகளை போர்த்தி மறைத்தனர்.

இதனை எதிர்த்து ஊத்துக்கோட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் ஏழுமலை, ஊத்துக்கோட்டை பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஷேக்தாவூத் ஆகியோர் தலைமை தேர்தல் கமி‌ஷனில் மனு அளித்தனர்.

அதில், மறைந்த தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தேர்தல் கமி‌ஷனின் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மேற்கோள் காட்டி இருந்தனர்.

அதன் அடிப்படையில் தேர்தல் கமி‌ஷன் மறைந்த அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மாவட்ட நிர்வாகத்துக்கு நேற்று சுற்றறிக்கை அளித்தது.

அதன்படி திருவள்ளூர் தொகுதி துணை தேர்தல் அலுவலர் பார்வதி மற்றும் தேர்தல் வட்டாட்சியர் வில்சன் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டையில் பெரியார், காமராஜ், அண்ணா, எம்.ஜி.ஆர். ஆகியோரின் சிலைகளுக்கு போர்த்தப்பட்ட திரைகளை அதிகாரிகள் அகற்றினர்.

இதற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். #Parliamentelection

Tags:    

Similar News