செய்திகள்

வேடசந்தூர் பகுதியில் வெயில் கொடுமைக்கு வயர்மேன் உள்பட 2 பேர் பலி

Published On 2019-03-16 09:48 GMT   |   Update On 2019-03-16 09:48 GMT
வேடசந்தூர் பகுதியில் வெயில் கொடுமைக்கு ஓய்வு பெற்ற வயர்மேன் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பகல் பொழுதில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே நடமாடுவதை தவித்து வருகின்றனர்.

வெயில் கொடுமையால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேடசந்தூர் குறிஞ்சிநகர் பகுதியை சேர்ந்தவர் பிச்சை (வயது80). ஓய்வு பெற்ற வயர்மேன். கடந்த சில நாட்களாக மனநலம் பாதித்ததுபோல் சுற்றிதிரிந்துள்ளார். திடீரென பிச்சை மாயமானார்.

அவரை குடும்பத்தினர் தேடி வந்த நிலையில் வடமதுரை சாலையில் உள்ள காலி இடத்தில் பிணமாக கிடந்தார். வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பிச்சை இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அய்யலூர் அருகே சங்கிலிகரடு மலை அடிவாரத்தில் 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பிணமாக கிடந்துள்ளார். அப்பகுதியில் ஆடு மேய்க்க சென்றவர்கள் இதை பார்த்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை கைப்பற்றி விசாரித்தபோது அவர் பிலாத்து பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என தெரிய வந்தது. மலைப்பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது சுட்டெரித்த வெயிலால் மயங்கி மலைப்பகுதியிலேயே இறந்து கிடந்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News