காரம்பாக்கம் அருகே வாலிபரை வெட்டி மோட்டார் சைக்கிள்-பணம் பறிப்பு
போரூர்:
பூந்தமல்லியை அத்த நசரத்பேட்டை, வரதராஜபுரம் எம்.ஜி.ஆர். தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ். கார்பென்டர்.
இவர் நேற்று இரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வரும் வழியில் மதுரவாயல் ஏரிக்கரை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ரூ.35 ஆயிரம் எடுத்தார்.
பின்னர் காரம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 7 பேர் கும்பல் திடீரென ராமதாசை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டினர்.
அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், செல்போன், ரூ.35 ஆயிரம், ஏ.டி.எம். கார்டுகள் ஆகியவற்றை பறித்துகொண்டு தப்பி சென்று விட்டனர்.
கொள்ளையர்கள் வெட்டியதில் தலை மற்றும் வலது கையில் படுகாயமடைந்த ராமதாஸ் பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரவாயல் இன்ஸ்பெகடர் ரவீந்திரன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஏ.டி.எம். மையத்தில் இருந்தே ராமதாசை கொள்ளை கும்பல் நோட்டமிட்டு அவரை தாக்கி கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.