பந்தநல்லூர் அருகே நிதி நிறுவன அதிபருக்கு அரிவாள் வெட்டு- போலீசார் விசாரணை
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அடுத்த செருகுடி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45), நிதி நிறுவன அதிபர். இந்த நிலையில் நேற்று இரவு ராஜேந்திரன், வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தனர். அவர்கள் கண் இமைக்கும் நேரத்துக்குள் ராஜேந்திரனை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர் அலறியடித்து கூச்சல் போட்டார். உடனே மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பற்றி பந்தநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் முன் விரோதம் காரணமாக ராஜேந்திரனை, மர்ம கும்பல் வெட்டியது தெரியவந்தது. தப்பிசென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.