செய்திகள்

திருப்பூரில் அரசு பஸ் மீது கல் வீச்சு டிரைவர்- பயணிகள் காயம்

Published On 2019-03-13 11:20 GMT   |   Update On 2019-03-13 11:20 GMT
திருப்பூரில் நேற்று நள்ளிரவில் அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் டிரைவர் மற்றும் பயணிகள் காயம் அடைந்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு திருச்சிக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை கரூரை சேர்ந்த டிரைவர் வெள்ளைச்சாமி ஓட்டி சென்றார்.

இதில் 40 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் நல்லூர் அருகே உள்ள பள்ளக்காட்டு புதூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த வாலிபர் திடீரென பஸ் மீது கல் வீசினார். இதில் முன் பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இந்த கண்ணாடி டிரைவர் வெள்ளைச்சாமி மற்றும் பஸ்சில் பயணம் செய்த ஒரு பெண், இரு குழந்தைகள் மீது விழுந்தது.

இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். கண்ணாடி டிரைவர் மீது விழுந்ததும் பஸ் கட்டுப்பாட்டை இழந்தது. சுமார் 500 அடி தூரம் தாறுமாறாக ஓடியது. டிரைவர் சுதாரித்து கொண்டு பஸ் விபத்தில் சிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு நிறுத்தினார்.

இதனால் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் உயிர் தப்பினார்கள். கண்ணாடி உடைந்ததில் காயம் அடைந்த டிரைவர் உள்பட 4 பேரும் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்றனர்.

விபத்து குறித்து நல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்தனர். பஸ் கல் வீசப்பட்ட பகுதியில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. அங்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள ஏராளமானோர் வந்து இருந்தனர்.

அவர்கள் தான் கல் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பாக திருமணத்திற்கு வந்த 10 பேரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது பஸ் மீது கல் வீசியது திருப்பூர் ராக்கியா பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மனோஜ் குமார் (20) என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

அவர் எதற்காக பஸ் மீது கல்வீசினார். குடிபோதையில் வீசினாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News