கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை - செங்கோட்டையன்
கோபி:
கோபி கரட்டூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா புதிய நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது.-
தமிழக அரசு பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 முடித்தவுடன் வேலை வாய்ப்பை உருவாக்கும் கல்வியாக மாற்றப்படும் எத்தனை கஷ்டங்கள், நிதி நெருக்கடி வந்தாலும் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது.
தமிழகம் மிகவும் அமைதிப்பூங்காவாக உள்ளது.போராட்டத்தை அறிவித்தவர்களே வாபஸ் பெற்றனர். இதற்கு காரணமே மக்கள் சக்தி தான். அதை யாரும் வெல்ல முடியாது.
கோபி அருகே உள்ள நம்பியூர் தனி தாலுகாவாக அமைக்கப்பட்டு அரசு கல்லூரி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகிறது.
ரூ.385 கோடி மதிப்பீட்டில் ஈரோடு முதல் சத்தியமங்கலம் வரையிலான 4 வழிசாலை பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
பாராளுமன்ற தேர்தல் வருகிறது. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க.கூட்டணி மகாத்தான வெற்றி பெறும். ஈரோடு மாவட்டம் மட்டுமல்ல கொங்கு மண்டலமே அ.தி.மு.க.வின் எஃகு கோட்டை. அதை யாராலும் உடைக்க முடியாது.
ஏழைகளின் அரசாகவும் கையேந்தாமல் கொடுக்கும் அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
முன்னாதாக காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த துணை ராணுவ வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. #Sengottaiyan #ADMK