செய்திகள்

புதுவை அருகே மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-02-21 11:59 GMT   |   Update On 2019-02-21 11:59 GMT
புதுவை அருகே மதுபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேதராப்பட்டு:

புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் குளத்து மேட்டு வீதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

இதனால் இவருக்கு திருமணம் செய்ய யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து மது பழக்கத்தை மறக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி அழைத்து சென்று கோலியனூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

அங்கு சில நாட்கள் மட்டுமே பரந்தாமன் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்து விட்டார்.

ஆனாலும் மது பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நேற்று பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார்.

தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பரந்தாமன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News