செய்திகள்

போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் - உறவினர்கள் பரபரப்பு புகார்

Published On 2019-02-14 14:33 GMT   |   Update On 2019-02-14 14:33 GMT
ஒரத்தநாடு அருகே போலீஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கிய பெண் இன்ஸ்பெக்டர் மீது உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு:

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெள்ளூர் புதுவளைவு பகுதியை சேர்ந்த ஆசைதம்பி மகன் ஜெயச்சந்திரன் (வயது 35). திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தென்பறையை சேர்ந்தவர் தமிழ்மாறன். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்தனர். இது தொடர்பாக அவர்களுக்கிடையே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் தமிழ்மாறன் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த தனது உறவினரும் போலீஸ் அதிகாரியுமான ஒருவர் மூலம் பாப்பாநாடு போலீஸ் நிலையத்தில் ஜெயச்சந்திரன் மீது புகார் செய்துள்ளார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, ஏட்டு சதீஷ் ஆகியோர் ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்து உள்ளனர். அப்போது ஜெயச்சந்திரனை தாக்கி அவரது செல்போனை பறித்து வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் போலீஸ் நிலையம் சென்ற ஜெயச்சந்திரன் நீண்ட நேராமாக வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை ஆசைதம்பி மற்றும் உறவினர்கள் பாப்பாநாடு போலீஸ் நிலையத்துக்கு வந்து பார்த்த போது ஜெயச்சந்திரனை போலீசார் தாக்கி செல்போனை பறித்தது தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து சட்ட விரோதமாக ஜெயச்சந்திரனை போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் தாக்கியதாக உயர் அதிகாரிகளிடம் புகார் செய்ய போவதாக ஜெயச்சந்திரனின் உறவினர்கள் தெரிவித்தனர். போலீஸ் நிலையத்தில் வாலிபரை விசாரணைக்கு அழைத்து இன்ஸ்பெக்டர் தாக்கிய சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News