செய்திகள்

முத்துப்பேட்டை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொன்ற வாலிபர்

Published On 2019-02-11 14:22 GMT   |   Update On 2019-02-11 14:22 GMT
முத்துப்பேட்டை அருகே காதலித்த பெண்ணுடன் கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் செல்வரசூன் (வயது28). விடுதலை சிறுத்தைகள் கட்சி தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.

அதே பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (27). இருவரும் போர்வெல் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் ராஜசேகர் வேறு இனத்தை சேர்ந்த கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் கீர்த்தனாவை திருமணம் செய்து கொள்ள ராஜசேகர் மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து செல்வரசூன் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த ஆண்டு திருத்துறைப்பூண்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் ராஜசேகருக்கும் கீர்தனாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. தற்போது இவர்களுக்கு 1 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் செல்வரசூன் மற்றும் ராஜசேகர் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தனக்கு காதலியை திருமணம் செய்து வைத்த ஆத்திரத்தில் ராஜசேகர் இருந்து வந்தார். இதனால் ராஜசேகர், செல்வரசூன் ஆகியோர் தனியாக வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் சமையலுக்காக வயல் நத்தைகளை சேகரித்து கொண்டு வந்த செல்வரசூன் அப்பகுதியில் உள்ள மகேந்திரன் என்பவரின் வீட்டிற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் மகேந்திரனுடன் சேர்ந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ராஜசேகர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் செல்வரசூன் மயங்கி விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகேந்திரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் செல்வரசூனை மீட்டு சிகிச்சைக்காக முத்துப்பேட்டை அரசு மருத்து வமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் சிகிச்சைக்கு வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த கொலை குறித்து தகவலறிந்து முத்துப்பேட்டை டிஎஸ்பி இனிகோ திவ்யன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கொலையான செல்வரசூன் உடலை கைபற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்துறைபூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குபதிவு செய்த முத்துப்பேட்டை போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த ராஜசேகரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த ராஜசேகரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் இருவரும் வேறு வேறு சமூக சேர்ந்தவர்கள் என்பதால் கோவிலூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News