செய்திகள்
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் - ஐகோர்ட்டில் அப்பல்லோ நிர்வாகம் வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. #JayaDeathProbe
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்துவருகிறது. ஆணையத்தில் ஆஜராகுமாறு பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதில் ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ.தீபா, சசிகலா உறவினர்கள், அரசு அதிகாரிகள், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை பதிவு செய்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அப்பலோ மருத்துவமனை மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், ஜெயலலிதா சிகிச்சை குறித்து விசாரிக்க நிபுணத்துவம் கொண்ட, தமிழக அரசு சாராத மருத்துவர்கள் கொண்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும்.
வழக்கில் தீர்வு காணும் வரை மருத்துவ விவகாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சசிகலாவும் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த மனு வரும் 11-ம் தேதி நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வரவுள்ளது. #JayaDeathProbe