செய்திகள்

திருமங்கலம் அருகே ஓட்டல் தொழிலாளி கொலை- மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

Published On 2019-02-07 11:11 GMT   |   Update On 2019-02-07 11:11 GMT
ஓட்டல் தொழிலாளி காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

பேரையூர்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது45). இவர் திருமங்கலம்-செக்கானூரணி ரோட்டில் உள்ள கரடிக்கல் பகுதியில் செயல்படும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வெளியே செல்வதாக கூறி விட்டு சென்ற பெரியகருப்பன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனிடையே ஓட்டல் அருகே பெரியகருப்பன் தலையில் வெட்டுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அவரின் மகள் சந்தியாவுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிப் போன அவர் சம்பவ இடம் வந்து தந்தையை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பெரியகருப்பன் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகருப்பனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை நடந்தது? என்று விசாரித்து வருகின்றனர். கொலையாளிகளையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News