செய்திகள்

குற்றாலம் விடுதியில் காதலியுடன் தங்கிய கோபி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-02-03 16:43 IST   |   Update On 2019-02-03 16:43:00 IST
குற்றாம் விடுதியில் மது குடித்ததை காதலி கண்டித்ததால் கோபி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை:

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகன் கார்த்திக் ராஜா (வயது18). இவருக்கும் கோபிசெட்டி பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்த மூர்த்தி மகள் சுராகா (19) என்பவருக்கும் காதல் அரும்பியது.

இதற்கு இருவரது வீட்டிலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காதல் ஜோடியினர் யாருக்கும் தெரியாமல் நெல்லை மாவட்டம் குற்றாலத்திற்கு வந்தனர். இங்கு அருவியில் குளித்து விட்டு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள். அப்போது கார்த்திக் ராஜா மது குடித்துள்ளார். இது அவரது காதலி சுராகாவுக்கு பிடிக்கவில்லை.

இதனால் காதலர்கள் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன முடைந்த சுராகா கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த கார்த்திக் ராஜா விடுதி அறையில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து கதறி அழுத சுராகா விடுதி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு குற்றாலம் போலீசார் விரைந்து வந்து கார்த்திக் ராஜா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோபியில் உள்ள கார்த்திக் ராஜாவின் பெற்றோருக்கும், கோபியில் உள்ள சுராகாவின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Similar News