செய்திகள்

வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியல்- 60 பேர் கைது

Published On 2019-01-30 22:33 IST   |   Update On 2019-01-30 22:33:00 IST
இளைஞர்களுக்கு வேலை கேட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
கந்தர்வகோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கேட்டும் மாவட்டத் தலைவர் நாராயணன் மற்றும் ஒன்றிய செயலாளர் இளையராஜா முன்னிலையில் 60 பேர் வெள்ளைமுனியன் கோவில் திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி வழியாக பஸ் நிலையத்திற்கு வந்தனர். ஊர்வலத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைகொடு, அரசாணை 56 ரத்துசெய், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

தொடர்ந்து கந்தர்வகோட்டை பஸ் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 60 பேரை கந்தர்வகோட்டை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் மாலையில் விடுவித்தனர். 
Tags:    

Similar News