செய்திகள்

வைத்திக்குப்பத்தில் டி.வி. வெடித்து தீப்பிடித்ததில் 2 பேர் உடல் கருகினர்

Published On 2019-01-28 17:00 GMT   |   Update On 2019-01-28 17:00 GMT
புதுவை வைத்திக்குப்பத்தில் வீட்டில் டி.வி.வெடித்து சிதறியதில் 2 பேர் உடல் கருகினர்.

புதுச்சேரி:

புதுவை வைத்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புராஜ். இவரது மனைவி முருகம்மாள் (வயது55). குப்புராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் முருகம்மாள் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கூனிமேட்டை சேர்ந்த முருகம்மாளின் உறவினர் பெர்னேஷ் (34) என்பவர் முருகம்மாள் வீட்டில் தங்கி புதுவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு முருகம்மாள் சாப்பிட்டு விட்டு வீட்டின் வாரண்டாவில் தூங்கினார். பெர்னேஷ் வீட்டின் அறையில் தூங்கினார். இன்று காலை முருகம்மாள் டி.வி. நிகழ்ச்சியை பார்க்க சுவீட்சை போட்டார். அப்போது டி.வி. வெடித்து சிதறி வீட்டில் தீப்பிடித்தது.

இதில் முருகம்மாளும், பெர்னேசும் தீயில் உடல் கருகினர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்கள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுபற்றி அறிந்ததும் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சைபெறும் இருவரையும் பார்த்துவிட்டு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து சோலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News