ரெட்டியார்பாளையத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பெயிண்டர் பலி
புதுச்சேரி:
புதுவை சண்முகாபுரம் வி.பி.சிங் நகரை சேர்ந்தவர் வீரப்பன் (வயது 65). பெயிண்டர் வேலை செய்து வந்தார். இவர் சம்பவத்தன்று காலை வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.
ரெட்டியார்பாளையம் கணபதி நகரில் சென்ற போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வீரப்பன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில், தூக்கி வீசப்பட்ட வீரப்பனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் வீரப்பனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை வீரப்பன் பரிதாபமாக இறந்து போனார்.
இந்த விபத்து குறித்து வடக்கு பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வரதராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, ஏட்டு ரவிக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விபத்தில் பலியான வீரப்பனுக்கு ராணி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.