செய்திகள்
திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியல்
ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
லாலாப்பேட்டை:
தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் பெரும்பாலான அரசு அலுவலகங்கள் ஊழியர்களின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள் மூடப்பட்டு கிடக்கின்றன. பள்ளி செயல்பாட்டில் இருந்தாலும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறுவதில்லை. இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை சரி செய்யவும், ஆசிரியர்கள் போராட்டங்களை கைவிட்டு மீண்டும் பள்ளிக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி லாலாப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஆசிரியர்கள் வகுப்பிற்கு வராததை கண்டித்து 11-ம் வகுப்பு மாணவர்கள் திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை இன்ஸ்பெக் டர் ரமாதேவி மற்றும் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடையே பேச்சு வார்தை நடத்தினர். பின்னர் போலீசாரின் அறிவுரையை ஏற்று மாணவர்கள் பள்ளிக்கு திரும்பினர். ஆசிரியர்களின் போராட்டத்தினை கண்டித்து மாணவர்கள் நடத்திய மறியல் போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.