செய்திகள்

சின்னசேலம் அருகே மினிலாரி மோதி கூட்டுறவு வங்கி செயலாளர் உடல் நசுங்கி பலி

Published On 2019-01-24 10:40 GMT   |   Update On 2019-01-24 10:40 GMT
சின்னசேலம் அருகே இன்று காலை நடைபயிற்சி சென்ற கூட்டுறவு வங்கி செயலாளர் மீது மினிலாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சின்னசேலம்:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது57). இவர் சின்னசேலத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக இருந்து வந்தார். இவர் தினமும் காலையில் நடை பயிற்சிக்கு செல்வார்.

இன்று காலை வழக்கம் போல் சின்னசேலம் இந்திரா நகர் பகுதியில் உள்ள கள்ளக்குறிச்சி- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சுப்பிரமணியன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் நோக்கி பார்சல் லாரி ஒன்று வந்தது.

அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி முன்னால் சென்று கொண்டிருந்த மினிலாரி மீது மோதியது. அந்த மினிலாரி நிலை தடுமாறி சாலை ஓரம் நடந்து சென்று கொண்டிருந்த சுப்பிரமணியன் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் மினிலாரி அடியில் சுப்பிரமணியன் சிக்கி உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்து சின்னசேலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விபத்தில் பலியான சுப்பிரமணியனுக்கு மனோன்மணி (51) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

Tags:    

Similar News