செய்திகள்

தாளவாடி அருகே கல்லூரி பேராசிரியர் கழுத்து இறுக்கி கொலை- போலீசார் தீவிர விசாரணை

Published On 2019-01-23 15:59 IST   |   Update On 2019-01-23 15:59:00 IST
தாளவாடி அருகே கல்லூரி பேராசிரியர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி கர்நாடக மாநில எல்லையான தாளவாடி அருகே உள்ள சொக்கன்புரத்தை சேர்ந்தவர் சதாசிவம் (வயது 28). இவரது தந்தை சிவண்ணா, தாயார் ரத்தினம்மாள் இருவரும் கூலி தொழிலாளர்கள். எனினும் தங்கள் மகனை நன்கு படிக்க வைத்தனர். கல்லூரி வகுப்பை முடித்த சதாசிவம் தாளவாடி அருகே உள்ள கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக இவர் கல்லூரிக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பேராசிரியர் சதாசிவம் அதன் பிறகு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் காணவில்லை.

இந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் அவரது ஊரான சொக்கன் புரத்திலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் மர்மமான முறையில் சதாசிவம் இறந்து கிடந்தார்.

அவரது கழுத்தில் கயிறுமாட்டி இறுக்கி இருந்தது. தலையின் பின்புறம் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. இதனால் யாரோ பேராசிரியர் சரவணனை கயிற்றால் இறுக்கி கொலை செய்து தப்பி சென்று இருப்பது தெரிய வருகிறது. கல்லூரி பேராசிரியர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சதாசிவத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பேராசிரியர் சதாசிவத்தை கொலை செய்தது யார்? என்ன காரணம்? என்று உடனடியாக தெரியவில்லை. தாளவாடி போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News