செய்திகள்

ஆசிரியர்கள் ஸ்டிரைக் எதிரொலி - திருப்பூரில் பாடம் நடத்திய மாணவர்

Published On 2019-01-22 10:46 GMT   |   Update On 2019-01-22 10:46 GMT
ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர் பாடம் நடத்தியுள்ளார்.
திருப்பூர்:

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ இன்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தை தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் மாவட்டத்தில் சில பள்ளிகள் பூட்டப்பட்டிருந்தன. ஒரு சில பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களை கொண்டு வகுப்புகள் எடுக்கப்பட்டன. சில மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின்னர் ஆசிரியர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் நுழைவு வாயில் முன்பு நின்று என்ன செய்வது என்று குழப்பமடைந்தனர். இதேபோன்று அரசு அலுவலகங்கள் வெறிச் சோடியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

திருப்பூர் வடக்கு தாலுகா பகுதியில் உள்ளவர்கள் குமரன் சிலை முன்பும், தெற்கு பகுதியில் உள்ளவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஊத்துக்குளி, தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட தாலுகா அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #tamilnews
Tags:    

Similar News