செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை

Published On 2019-01-21 14:25 GMT   |   Update On 2019-01-21 14:25 GMT
சேலத்தில் இன்று காலை காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சேலம்:

சேலம் மாவட்டம் சங்ககிரி, இடங்கணசாலை, தூதனூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் குடிநீர் கேட்டு இன்று காலை சேலம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். அங்கு மேட்டூர் குடிநீர் கிடைத்து வந்தது. எங்கள் ஊருக்கு முன்பகுதியில் உள்ளவர்கள் மோட்டார் மூலம் தண்ணீரை மெயின் குழாயில் இருந்து உறிஞ்சுவதால் எங்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.

மேலும் பொதுகிணற்றில் டேங்க் மூலம் குடிநீர் பயன்படுத்தி வந்தோம். தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் அந்த கிணற்றை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் மென பொதுமக்கள் சார்பில் மனு கொடுத்தோம்.

ஆனால் இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கடந்த 6 மாத காலமாக குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தோம். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் காலிகுடங்களுடம் சேலம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதையடுத்து டவுன் போலீசார் சுமூகமாக பேச்சுவார்தை நடத்தி மனு கொடுக்க அனுப்பி வைத்தனர். அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News