செய்திகள்

தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

Published On 2019-01-21 10:00 GMT   |   Update On 2019-01-21 10:00 GMT
தண்டையார்பேட்டையில் குடிநீர் கேட்டு பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ராயபுரம்:

தண்டையார்பேட்டை ராஜிவ்காந்தி நகர், ராஜ சேகரன்நகர், தமிழன் நகர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு கடந்த 6 மாதத்துக்கு மேலாக சரிவர குழாய்களில் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

சிலநேரங்களில் வரும் குடிநீரும் கழிவுநீர் கலந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனை கண்டித்தும், குடிநீர் முறையாக சப்ளை செய்ய கோரியும் இன்று காலை அப்பகுதி பெண்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் நெடுஞ்சாலை 3-வது பாலம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

ஆர்.கே.நகர் போலீசார் மற்றும் குடிநீர் வாரிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News