செய்திகள்

திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது வழக்கு

Published On 2019-01-19 10:57 GMT   |   Update On 2019-01-19 10:57 GMT
திருப்பத்தூர் அருகே இருதரப்பினர் மோதல் சம்பவத்தில் 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள குரும்பேரி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பிரிவினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில், ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் ‘சைலன்சரை’ கழற்றிவிட்டு, அதிக ஒலி எழுப்பியவாறு மற்றொரு பிரிவினர் இருக்கும் பகுதிக்குள் சென்றனர். அதனை அவர்கள் தட்டிக்கேட்ட போது, மீண்டும் தகராறு ஏற்பட தொடங்கியது.

அதேபோல் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம், கோவில் மாட்டினை அழைத்து வரும்போது தகராறு ஏற்பட்டது. மேலும் அங்குள்ள தலைவர் ஒருவரின் சிலை அருகில் காலி மதுபாட்டில்கள் கிடந்தன. அதனை மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் தான் வீசியுள்ளார்கள் என நினைத்து கேட்டதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

நேற்றும் வாக்குவாதம் நீடித்தது. இதில் இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கல், கையால் தாக்கி கொண்டனர். இந்த சம்பவத்தில் வெங்கடேசன் தரப்பை சேர்ந்த நீலகண்டன் (வயது 24), ஸ்ரீதர் (24) ஆகிய 2 பேருக்கும், சாந்தலிங்கம் தரப்பை சேர்ந்த அன்பரசு, செங்கல்வராயன், ஜெகதீசன் ஆகிய 3 பேருக்கும் காயம் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். மேலும் வீடுகள் மீது கற்கள் வீசப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக 3 மோட்டார்சைக்கிள்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜேசுராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு ஆயுதப்படை போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையிலும் பதற்றத்தை தணிக்கவும் 100 -க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் ஒருதரப்பை சேர்ந்தவர்களை பார்த்துவிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ்சந்திரபோஸ் திருப்பத்தூர் சப்-கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். பின்னர் அங்கிருந்து குரும்பேரி கிராமத்திற்கு தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு, 4 கார்களில் புறப்பட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுபாஷ்சந்திரபோஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வந்த வாகனங்களை நிறுத்தினர். அவர்களிடம், ‘‘ஊர் முழுவதும் போலீசாரின் முழுகட்டுப்பாட்டிற்குள் உள்ளது, யாரும் அத்துமீறி உள்ளே வரக்கூடாது’’ என கூறி, அவர்களை திருப்பி அனுப்பினர்.

இப்பிரச்சினை தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 13 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News