செய்திகள்

தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 4-வது இடம்

Published On 2019-01-19 10:08 GMT   |   Update On 2019-01-19 10:08 GMT
இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகராட்சி 4-வது இடத்தை பிடித்துள்ளது.
திருச்சி:

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் செயல்படுத்தப்பட்ட பின்னர், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகத்தின் சார்பில் ஆண்டுதோறும் தூய்மை நகரங்களை பட்டியலிட்டு அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 4,237 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து ஆய்வு செய்யப்படுகிறது. அதற்காக ஆன்-லைன் மூலம் பொதுமக்கள் கருத்தும் கேட்கப்படுகிறது. 1 கோடியே 40 லட்சம் மக்கள் பங்கேற்று கருத்து தெரிவிக்கிறார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. மொத்தம் 5 ஆயிரம் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அவற்றில் அதிகபட்ச மதிப்பெண் பெறும் நகரங்களை வரிசைப்படுத்தி தூய்மை நகரங்கள் என பட்டியலிடப்படுகிறது.

திருச்சி மாநகராட்சி கடந்த 2015-ம் ஆண்டு 14.25 புள்ளிகள் பெற்று இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் 2-வது இடத்தை பெற்றது. 2016-ம் ஆண்டில் 3-வது இடமும், 2017-ம் ஆண்டு 7-வது இடமும் பெற்றது. கடந்த ஆண்டு பட்டியலில் மிகவும் பின்னுக்கு தள்ளப்பட்டு 13-வது இடத்தை பெற்றது. இருப்பினும் தமிழ்நாட்டில் முதலிடம் என்று ஆறுதல் அடைய செய்தது.

இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்கள் பட்டியலில் இடம் பிடிக்க, ஆன்-லைன் மூலம் மக்கள் கருத்து கேட்டு மதிப்பெண் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டது. அதற்காக திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய செயலி (ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டது. அது மட்டுமல்லாது முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து தளங்களையும் பயன்படுத்த ஊக்குவிப்பு பணிகளில் ஈடுபட்டது. அதன் பயனாக திருச்சி மாநகராட்சி தூய்மை நகரங்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.

புள்ளி விவரங்கள் அடிப்படையில் இந்தியாவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் ஐதராபாத் முதலிடத்தையும், நொய்டா 2-வது இடத்தையும், தெற்கு டெல்லி 3-வது இடத்தையும், திருச்சி மாநகராட்சி 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர்வரை, ஆன்-லைன் மூலம் திருச்சி மாநகராட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.


Tags:    

Similar News