செய்திகள்

பரமத்திவேலூரில் குட்கா வழக்கில் கைதான பாத்திர வியாபாரி திடீர் தற்கொலை

Published On 2019-01-19 07:07 GMT   |   Update On 2019-01-19 07:38 GMT
குட்கா வழக்கில் சிக்கிய பாத்திர வியாபாரி திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. #gutka

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் திருவள்ளுவர் நகரில் பாத்திரக்கடை நடத்தி வருபவர் விஜய் (எ) ராமலிங்கம்(வயது 35). இவர் தனது தாய், தந்தையுடன் சேர்ந்து பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். விஜய் பாண்டமங்கலத்திலும், இவரது பெற்றோர் கந்தசாமி கண்டர் கல்லூரி சாலையில் கண்டர் நகரிலும் வசித்து வருகின்றனர்.

இவரது உறவினர் ஒருவர் மோகனூரில் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான குடோனுக்கு கடந்த மாதம் விஜய் சென்றார். அப்போது அந்த குடோனில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பான்பராக், குட்கா போன்ற பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த விஜயை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். 1 மாதம் கழித்து அவர் ஜாமினில் வெளியே வந்தார். அதன்பிறகு உறவினர்களுக்கும் விஜய்க்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் விஜய் மன உளைச்சலில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விஜய் பாத்திரக்கடையில் இருந்து நேற்று இரவு கண்டர் நகரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அப்போது அங்கு அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய பெற்றோர் மகன் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு விரைந்து வந்து விஜய் பிணத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்கா வழக்கில் சிக்கிய விஜய் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்ட விஜய்க்கு மனைவி புனிதா(30), 1 மகன், 1 மகள் உள்ளனர். #gutka

Tags:    

Similar News