செய்திகள்

கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கணவன், மனைவி கைது

Published On 2019-01-12 05:49 GMT   |   Update On 2019-01-12 05:49 GMT
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கணவன், மனைவியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கோவை:

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 56). இவரது மனைவி ஜெயா(45).

இவர்கள் இருவரும் சவுரிபாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக ரோந்து சென்ற பீளமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி இருவரையும் பிடித்து விசாரித்தார்.

அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் 2 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தேனியில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்து சிறு, சிறு பொட்டலங்களாக மாற்றி கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இவர்களிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் கடந்த 4 வருடங்களாக கோவை ஒத்தகால் மண்டபம் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர்.

முருகன் மீது பெரிய கடை வீதி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகள் இருக்கிறது. இவர் கடந்த சில நாட்களாக பீளமேடு பகுதியில் மாணவர்களுக்கு கஞ்சா விற்று வந்ததாக போலீசார் கூறினார். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

காட்டூர் போலீசார் காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்ற போது பஸ் நிலையத்தின் எதிர்புறம் உள்ள கழிப்பிடம் அருகே முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கிடமாக நிற்பதை கண்டனர். அவரை பிடித்து சோதனை செய்த போது 700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவரை கைது செய்தனர்.

விசாரணையில் அவர் புதுசித்தாபுதூரை சேர்ந்த பன்னீர்செல்வம்(69) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து கஞ்சா மற்றும் ரூ.1280 -ஐ பறிமுதல் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News