செய்திகள்

சபரிமலையில் யானை மிதித்து சேலம் அய்யப்ப பக்தர் பலி

Published On 2019-01-09 11:11 GMT   |   Update On 2019-01-09 11:11 GMT
சபரிமலையில் சேலத்தை சேர்ந்த அய்யப்ப பக்தரை யானை மிதித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்:

சேலம் பள்ளப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 35). இவர் சேலத்தில் உள்ள ஒரு வெள்ளிப்பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் பரமசிவம் சபரிமலை அய்யப்பனை தரிசிப்பதற்காக மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வந்தார்.

இந்த பகுதியில் இருந்து கடந்த 7-ந்தேதி (திங்கட்கிழமை) பரமசிவம் உள்பட 30 பக்தர்கள் இருமுடி கட்டி அய்யப்பனை தரிசிப்பதற்காக 2 வேன்களில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இதில் ஒரு வேனில் 15 பக்தர்களும், மற்றொரு வேனில் 15 பக்தர்களும் அமர்ந்திருந்தனர்.

வேன், பெரும்வழி என்ற இடத்தில் வந்ததும் அங்கு வேனை நிறுத்தி விட்டு பரமசிவம் உள்பட 15 பக்தர்களும் 48 மைல் தூரத்தில் இருக்கும் சபரிமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தனர்.

மற்றொரு பிரிவினர் பம்பையில் வேனை நிறுத்தி அங்கிருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

நள்ளிரவு 12 மணி அளவில் பரமசிவம் உள்பட 15 பேரும் அழுதா இறக்கம் அருகே சென்றபோது, பரமசிவம் மட்டும் தனியாக ½ கிலோ மீட்டர் தூரம் முன்னாடி சென்று விட்டார்.

அப்போது அந்த வழியாக காட்டு யானை ஒன்று வந்தது. அந்த யானை பரமசிவத்தின் தலையை திடீரென தும்பிக்கையால் மேலே தூக்கியது. இதனால் அவர் அய்யோ என அலறினார். பின்னர் தலையோடு சேர்ந்து உடலை ஓங்கி தரையில் அடித்து, காலால் மிதித்து கொன்றது.

பரமசிவத்தின் அலறலை கேட்டு பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர்கள் அங்கு ஓடி வந்தனர். ஆனால் பரமசிவம் தலை நசுங்கி ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்

இது பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு முட்களி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது.

இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர். பரமசிவம் பலியான தகவல் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். #tamilnews
Tags:    

Similar News