செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் சோலார் பேனல் திருடிய 2 பேர் கைது

Published On 2019-01-07 10:52 GMT   |   Update On 2019-01-07 10:52 GMT
ஆண்டிப்பட்டி அருகே கோவிலில் சோலார் பேனல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டி அருகே கடமலைக்குண்டு கண்டமனூர் சாலையில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலை கடமலைக்குண்டுவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் பராமரித்து இரவு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று வழக்கம் போல் பூஜைகள் முடிந்ததும் கோவில் கதவை மூடிச் சென்றார். மறு நாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த சோலார் பேனல் திருடப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். வரு‌ஷநாடு அருகே உள்ள தும்மக் குண்டுவைச் சேர்ந்த முத்துப்பாண்டி (வயது 22), விக்னேஷ் (24) ஆகியோர் சோலார் பேனலை திருடியது தெரிய வந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சோலார் பேனலையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News