மீஞ்சூரில் ஆஸ்பத்திரி குடோனுக்கு தீவைத்த மர்மகும்பல்
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி அலுவலகம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆஸ்பத்திரியில் பயன்படுத்தப்படாத பொருட்கள் லால்பகதூர் சாஸ்திரி தெருவில் உள்ள குடோனில் வைக்கப்பட்டு இருந்தது.
நேற்று இரவு 12 மணியளவில் திடீரென குடோனில் இருந்து கரும் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
பொன்னேரி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை.
தீப்படித்த குடோனில் மின் இணைப்பு கிடையாது. எனவே மர்ம நபர்கள் குடோனுக்குள் தீயை பற்ற வைத்து வீசி இருக்கலாம் என்று தெரிகிறது. தீ வைத்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ், தீப் பிடித்த குடோனை பார்வையிட்டார். மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.