செய்திகள்

மெரினாவில் போலீஸ் தாக்கியதில் வெளிமாநில வாலிபர் பலி?- கடற்கரையில் பிணமாக கிடந்தார்

Published On 2019-01-06 14:19 GMT   |   Update On 2019-01-06 14:19 GMT
மெரினா சர்வீஸ் சாலையில் வெளிமாநில வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை போலீசார் தாக்கியதில் இறந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

சென்னை:

மெரினா கடற்கரையில் துரித உணவக ஓட்டலில் பணிபுரிந்து வந்தவர் ராஜேஷ்குமார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் ராணிமேரி கல்லூரி அருகே தகராறில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று பிடித்தனர்.

பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ராஜேஷ் குமார் மீது வழக்குகள் ஏதும் இல்லாததால் போலீசார் அவரை விடுவித்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மெரினா சர்வீஸ் சாலையில் ராஜேஷ் குமார் பிணமாக கிடந்தார். இதுபற்றி நடைபயிற்சி சென்றவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ராஜஷ்குமார் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசார் தாக்கியதில்தான் அவர் உயிரிழந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராஜேஷ்குமாரின் மரணம் குறித்து ஒடிசாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து உடலை பெற்றுச் சென்றனர்.

போலீஸ் தாக்கியதால் தான் ராஜேஷ்குமார் பலியானார் என்பதை உயர் அதிகாரிகள் மறுத்தனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ராஜேஷ் குமார் போதையில் தகராறு செய்ததை போலீசார் விசாரித்து அனுப்பி விட்டனர்.

இதில் தேவையில்லாமல் போலீசார் தாக்கியதாக புகார் கூறப்பட்டுள்ளது என்றனர்.

Tags:    

Similar News