செய்திகள்

மதுரையில் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

Published On 2019-01-05 12:50 GMT   |   Update On 2019-01-05 12:50 GMT
மதுரையில் வரதட்சணை கேட்டு மாமியாரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை:

மதுரை கரிமேடு மேலப்பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர். இவரது மகன் அஜித் (வயது 22). இவரும், பாத்திமா நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (38) என்பவரின் மகள் சந்தியாவும் காதலித்து வந்தனர். காதலுக்கு எதிர்ப்பு வந்ததால் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு அஜித், வரதட்சணை கொடுக்குமாறு மாமியார் தமிழ்செல்வியிடம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்செல்வி கரிமேடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது வீட்டில் இருந்த பொருட்களை அஜித் திருடிச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித் வீட்டில் இருந்த பொருட்களை மீட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அஜித், தமிழ்செல்வியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமிழ்செல்வி ஆட்டோவில் காளவாசல் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது ஆட்டோவை மறித்த அஜித், அவரது தந்தை சுந்தர், உறவினர் மாணிக்கம் ஆகிய 3 பேர் தமிழ்செல்வியிடம் தகராறு செய்து அவரை கத்தியால் சரமாரியாக குத்தினர்.

படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News