வடமதுரையில் மர்மமான முறையில் இறந்த மில் காவலாளி
வடமதுரை:
வடமதுரை அருகே நடுப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவரது மனைவி உமாமகேஸ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
கண்ணன் வடமதுரை மூகாம்பிகை மில்லில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் பணியில் இருந்த கண்ணன் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்து கண்ணணை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வடமதுரை, அய்யலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மில்களில் தொடர்ந்து மர்மமான முறையில் தொழிலாளர்கள் இறந்து வருகின்றனர். பெண்கள் தற்கொலை செய்தது, பெண்கள் விஷயத்தில் 3 வாலிபர்கள் கொல்லப்பட்டது என அடிக்கடி பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் இதுவரை எந்த மரணத்திற்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் பணியின்போது காவலாளி உயிரிழந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எனவே அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள மில்களில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.