கோச்சடையில் பால்வாடி ஆசிரியை வீட்டில் நகை கொள்ளை
அச்சம்பத்து:
மதுரை கோச்சடை கானை அம்பலக்காரர் தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 54). தெற்குவாசல் பகுதியில் பால்வாடி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று கல்யாணசுந்தரம் பழனி கோவிலுக்கு பாத யாத்திரையாக சென்றார். பின்னர் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டார்.
பட்டப்பகலில் வீடு பூட்டிக் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள அறையில் வைத்திருந்த 31 பவுன் நகைகள், ரூ.30 ஆயிரம் ஆகியவற்றை அவர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் கொள்ளை நடந்த பகுதி பரபரப்பான குடியிருப்பு பகுதியாகும். இங்கு பட்டப்பகலில் திருட்டு நடந்திருப்பது அங்கு வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.