செய்திகள்

வேல்ராம்பேட்டில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-12-31 11:31 GMT   |   Update On 2018-12-31 11:31 GMT
வேல்ராம்பேட்டில் நண்பர்களுடன் மதுகுடித்து விட்டு வந்தததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

புதுவை வேல்ராம்பேட் முதல் குறுக்குதெருவை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி ருக்குமணி. இவர்களது மகன் ராஜ்குமார் (வயது18). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு புருசோத்தமன் இறந்து விட்டார். இதையடுத்து ருக்குமணி வீட்டுவேலை செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

10-ம்வகுப்பு வரை படித்த ராஜ்குமார் அவ்வப்போது பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு புத்தாண்டையொட்டி ராஜ்குமார் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார்.

இதனை அவரது தாய் ருக்குமணி கண்டித்தார். இதனால் ராஜ்குமார் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். கோபம் தணிந்த பின் மகன் வீட்டுக்கு வருவான் என்று ருக்குமணி கருதி அவரை தேடவில்லை. நள்ளிரவு ஆகியும் ராஜ்குமார் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த ருக்குமணி வீட்டின் பின்புறத்தில் உள்ள கொட்டகைக்கு சென்று பார்த்தார். அப்போது ராஜ்குமார் துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்குவதை கண்டு ருக்குமணி அலறினார்.

பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து ராஜ்குமாரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் பழனி ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News