கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. ரத்தம்: விஷம் குடித்து இறந்த வாலிபரின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல்
மதுரை:
சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுள்ள ரத்தத்தை செலுத்தியதால் அவருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் வழங்கிய கமுதி வாலிபர் மன உளைச்சல் காரணமாக எலி மருந்தை தின்றார். உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வாலிபரின் சாவில் சந்தேகம் உள்ளது. எனவே அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய பிற மாவட்ட அரசு டாக்டர் குழுவை நியமிக்க வேண்டும். பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவரது பெற்றோர் கூறினர். இதனால் நேற்று பிரேத பரிசோதனை நடைபெறவில்லை.
இன்றும் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வாலிபரின் உடல் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். #HIVBlood #PregnantWoman