செய்திகள்

அரசு வேலை வாங்கி தருவதாக பணமோசடி - அரியலூர் ஆசிரியர் மீது வழக்கு

Published On 2018-12-30 16:35 GMT   |   Update On 2018-12-30 16:35 GMT
அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 7.50 லட்சம் பணமோசடி செய்த அரியலூர் ஆசிரியர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் வாலாஜாநகரம்  சக்திநகரை சேர்ந்தவர் விஸ்வநாதன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரை நெய்வேலியை சேர்ந்த சிவக்குமார், சு.ஆடுதுறையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் அணுகி, போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருமாறு கேட்டுள்ளனர். 

இதையடுத்து விஸ்வநாதன், அவரது நண்பரான அரியலூர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் ராயப்பன் என்பவரை அணுகியுள்ளார். அவர் கரூரை சேர்ந்த சேர்மன் என்பவர் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக  சிவக்குமார், மணிகண்டன் ஆகியோரிடமிருந்து  முன்பணமாக ரூ.7.50 லட்சத்தை வாங்கிய விஸ்வநாதன், அதனை ராயப்பனிடம் கொடுத்துள்ளார். ஆனால்  நீண்ட நாட்களாகியும் ராயப்பன் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. 

இது குறித்து விஸ்வநாதன் அரியலூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி மகாலட்சுமி, இது குறித்து நடவடிக்கை எடுக்க அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில்  போலீசார் ஆசிரியர் ராயப்பன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News