நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கி சித்ரவதை- தச்சு தொழிலாளி கைது
புதுச்சேரி:
புதுவை ஜீவானந்தபுரம் எம்.ஜி.ஆர். வீதியை சேர்ந்தவர் வெங்கடேசன், தச்சு தொழிலாளி. இவரது மனைவி புவனேஸ்வரி (வயது30). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே புவனேஸ்வரியின் நடத்தையில் வெங்கடேசன் சந்தேகம் அடைந்தார். இதனால் தினமும் மதுகுடித்துவிட்டு புவனேஸ்வரியை அடித்து உதைத்து சித்ரவதை செய்து வந்தார்.
அதுபோல நேற்று மதியம் வெங்கடேசன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது மீண்டும் இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் தேங்காய் திருவியால் மனைவியை தாக்கினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த புவனேஸ்வரி கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.