செய்திகள்

விசாரணைக் கைதி மரணம்- சென்னை எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டர் டிரான்ஸ்பர்

Published On 2018-12-22 06:48 GMT   |   Update On 2018-12-22 06:48 GMT
சென்னை எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் அடைந்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் குணசேகரன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். #EsplanadePoliceStation
சென்னை:

சென்னை கொருக்குப்பேட்டை ஜெ.ஜெ.நகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது மகன் ஜெயக்குமார் (20). பிராட்வேயில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த கடையில் அவருடன் அஜித்குமார், விக்னேஷ் ஆகிய வாலிபர்களும் வேலை செய்து வருகிறார்கள். கடையின் மேல்பகுதியில் குடியிருப்பு பகுதி உள்ளது. மாடியில் உள்ள வீட்டில் நேற்று முன்தினம் நகை திருட்டு போய் உள்ளது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் எஸ்பிளனேடு போலீசார் ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் ஜெயக்குமார் இறந்துவிட்டார். ஜெயக்குமார் உடல்நலக்குறைவால் இறந்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.



ஆனால், அவரை போலீசார் லாக்கப்பில்  வைத்து அடித்து கொன்றுவிட்டதாக கூறி பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மற்ற இருவரையும் விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், எஸ்பிளனேடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் குணசேகரன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை சென்னை காவல் ஆணையர் பிறப்பித்துள்ளார். #EsplanadePoliceStation
Tags:    

Similar News