செய்திகள்
மரணமடைந்த மூதாட்டி நல்லம்மாள்.

395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்து சாதனை படைத்த மூதாட்டி மரணம்

Published On 2018-12-22 05:49 GMT   |   Update On 2018-12-22 05:49 GMT
புதுக்கோட்டையில் 395 குடும்ப உறுப்பினர்களுடன் 119 ஆண்டுகள் வாழ்ந்த மூதாட்டி மரணம் அடைந்தார். #Nallammal
அறந்தாங்கி:

தற்போதைய மாறிவிட்ட சூழ்நிலையில் உலக மக்கள் தொகை அமைப்பு 2015-ம் ஆண்டு நிலவரப்படி ஆண்கள் வாழ்வு சராசரி காலம் 68 வயது என்றும், பெண்கள் வயது சராசரி ஆயுள் காலம் 71 ஆண்டுகள் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மூதாட்டி 119 ஆண்டுகள் வரை வாழ்ந்து நேற்று இறந்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒத்தகடை சின்னசுனையகாடு கிராமத்தை சேர்ந்த நல்லம்மாள் 1899-ம் ஆண்டு பிறந்தார். இவரது கணவர் அருணாச்சலம். 20 வருடங்களுக்கு முன்பு அவர் இறந்து விட்டார். 

இவர்களுக்கு தங்கையா, தவபிரகாசம் என்ற 2 மகன்களும், பத்மாவதி, காந்திமதி, அம்பிகாபதி, கலைமதி, கோமதி என 5 மகள்களும் பிறந்தனர். இவர்கள் மூலம் 22 பேரன், பேத்திகள், 45 கொள்ளு பேரன், கொள்ளு பேத்திகள், அவர்கள் மூலம் எள்ளு பேரன், எள்ளு பேத்தி என மொத்தம் 395 பேர் இவர்கள் குடும்பத்தில் மட்டும் உள்ளனர்.

4வது தலைமுறையுடன் வாழ்ந்த நல்லம்மாள் நேற்று இறந்த தகவல் அறிந்ததும் உறவுக்காரர்கள் அனைவரும் திரண்டு விட்டனர். நல்லம்மாளின் எள்ளு பேரன், பேத்தி வரை குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை மட்டுமே 395 தொட்டது. அதன் பிறகு உறவுக்காரர்களும், கிராமத்தினரும் திரண்டு அஞ்சலி செலுத்தி நல்லம்மாளின் உடலை அடக்கம் செய்தனர்.

119 வயதை தாண்டி வாழ்ந்த நல்லம்மாள் குறித்து அவரது உறவினர்கள் கூறும் போது:- கடைசிவரை நல்லம்மாள் பார்க்கும் திறன், கேட்கும் திறன் ஆகியவற்றுடன் பேசும் திறனையும் பெற்றிருந்தார் என்றும் பேரன், பேத்திகள், எள்ளு பேரன், பேத்திகள் என யார் வந்தாலும் சரியாக அடையாளம் கண்டுபிடித்து பேசுவார் என்றும் தெரிவித்தனர்.

வயலுக்கு தினசரி வேலைக்கு சென்று உழைத்த நல்லம்மாள் கடைசி வரை ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. இயற்கை உணவு, இயற்கை மருத்துவம் என இயற்கையுடனேயே வாழ்ந்து மறைந்துள்ளார் என்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு தான் முதன் முறையாக அவருக்கு காய்ச்சல், சளி தொந்தரவு ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அப்போதும் ஆஸ்பத்திரிக்கு செல்லவில்லை.

இந்த நிலையில் தான் நேற்று அவர் 119-வது வயதில் இறந்துள்ளார். கடைசியில் உறவுகளோடு இணைந்து வாழ்ந்தால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழலாம் என்ற உண்மையை கூறி மறைந்துள்ளார் நல்லம்மாள்.

உலகிலேயே அதிக வயது வாழ்ந்தவர் என்ற பெருமையை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிகால்மெட் என்ற பெண்மணி பெற்றுள்ளார். 1875-ம் ஆண்டு பிறந்த இவர் 1997-ம் ஆண்டு இறந்தார். மொத்தம் 122 ஆண்டுகள் 164 நாட்கள் ஜெனிகால்மெட் வாழ்ந்துள்ளார்.

புதுக்கோட்டை நல்லம்மாள் 119ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இன்னும் சில ஆண்டுகள் நல்லம்மாள் வாழ்ந்திருப்பார். ஆனால் கஜா புயலுக்கு பிறகு நல்லம்மாள் உடலில் ஏற்பட்ட மாற்றம் உலக சாதனை படைக்க இருந்த அவரை பறித்துக் கொண்டது காலம்.  #Nallammal
Tags:    

Similar News